காஞ்சிபுரம், ஏப். 20 –
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய காவலர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அவர்களுக்கான ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.சத்தியபிரியா மற்றும் எஸ்.பி.சுதாகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் உரையாடி அவர்களை ஊக்குவித்து, குற்றச் செயல்களை தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் டிஐஜி சத்யப்ரியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து மாதத்தில் 400க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் தொடர்புகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தற்போது ரோந்து வாகனத்தில் சுற்றும் காவலர்களுக்கு திறம்பட செயல்படும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் குற்றங்கள் குறையும் என தெரிவித்தார். இத்துவக்க விழா நிகழ்ச்சியில் காஞ்சி காவல் கோட்ட துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.