பொன்னேரி, ஜூன். 23 –
பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தில் அமைந்துள்ளது. காளத்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 28.78 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆக்கிரமப்பு செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். மீதமுள்ள நிலத்தில் விவசாயம் மற்றும் கடைகள் கட்டி வியாபாரம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நிலங்களை மீட்டுத் தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று சுமார் 14.51 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் மீட்பு பெயர் பலகை வைத்தும் எல்லைக் கற்களை நட்டு வைத்தனர். பின்னர் கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை மூடி சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் மூன்று தலைமுறைகளாக 500க்கும் மேற்பட்டோர் வீடுகட்டி அப்பகுதியில் வசித்து வருவதால் இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோவிலுக்கு வரி செலுத்தி வருகிறோம் என்றும் அதனால் இந்த நடவடிக்கையை அரசு அலுவலர்கள் தவிர்க்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு குடியிருக்க வாழ்வதற்கு வேறு வழியில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரை தடுத்து நிறுத்தினர். அதன் பின் அங்கு கூடி இருந்தக் கூட்டம் கலைந்து சென்றது.