சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மேலும், பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு, இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், ஒன்றிய பொருளாளர் இளங்கோ, வழக்கறிஞர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிவகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், துரை குணாளன், விளக்கெண்ணெய், மாநில துணைச் செயலாளர் விஜயன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு பேசுகையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த போது அண்ணா அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி இடம் கொடுக்காமல் எடப்பாடி மறுத்தார். அப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் யாரும் கேட்காமலே விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் முதல்வராகியிருப்பார். ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். அவருக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளுக்கான நடவடிக்கை மேற்கொண்டு தற்போது வரை அந்த அம்மையாரும் உயிருடன் இருந்திருக்கும் படி கலைஞர் காத்திருப்பார் என்றார்.
மேலும் பாஜக இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பி வந்தாலும், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, ராமேஸ்வரம், திருவரங்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றியடைந்து உள்ளதென்பதை பாஜக தெரிந்துக்கொள்ள வேண்டும், மேலும் புதிதாக தற்போது தேர்தல் வாக்கிற்காக இராமரை அழைத்து வருகிறார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலைகளினால் பெருத்த பாதிப்புகளை அடைந்து வரும் மக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள் என்றும், மேலும் இம் மண்ணின் கடவுள் முருகன் உள்ளிட்ட 108 வகையான அம்மன்கள், முணியாண்டி, முனீஸ்வரன் எல்லாம் இருக்கிறார்கள் ஆதலால் இங்கு மதப் பிரச்சாரம் எடுபடாதென்றார்.