கும்கோணம், செப். 07 –
கும்பகோணத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நேஷனல் அவார்டு (விருது) வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹோட்டல் லீ கார்டனில், சக்தி ரோட்டரி சங்க தலைவர் மைதிலி முத்துவேல் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் குழு தலைவர் ஜாஸ்மின் வின்சென்ட், ஒருங்கிணைப்பாளர் ஜமுனா லட்சுமி காந்தன், செயலாளர் ஜெயலட்சுமி, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டி செல்வி, திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட கல்வித் தலைவர் அருண் ஜெபராஜ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
மேலும் அவர் உரையாற்றும் போது, மாணவ செல்வங்களுக்கு கல்வியுடன், நற்குணம், ஒழுக்கம், சமத்துவம் கற்பித்து, அவர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், 35 பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியருக்கு நேஷனல் அவார்டு விருதுகள் வழங்கப்பட்டன.