பொன்னேரி, மார்ச். 13 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டுகாலம் பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் புனரமைப்பு திருப்பணி நடைப்பெறப்பட்டு, கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
இதற்கான மூன்று கால யாக பூஜையில் முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு அர்ச்சனைகளும் தமிழிலேயே செய்யப்பட்டது. தக்க சிவனடியார்கள் மூலம் நடைபெற்ற இந்த கலச பூஜையில் கலச நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய கோபுரங்களுக்கு திருக்குடமுழுக்கு செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பக்தர்கள் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பெரவள்ளூர் கிராம மக்கள் செய்தனர்.