நடிகர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறமை இந்திய சினிமாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பலமொழிகளைச் சேர்ந்த திரைப்பட நடிகர்களுக்கு தேசிய விருது ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
இந்நிகழச்சியில் அவர் பேசியதாவது
திரைப்படங்களில் வன்முறை, ஆபாசம் போன்றவற்றை சினிமா தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். நல்லொழுக்கம் மற்றும் நெறிமுறைகளைத் தெரிவிப்பதாக திரைப்படம் இருக்க வேண்டும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக திரைப்படங்கள் குரல் கொடுக்க வேண்டும். நல்ல திரைப்படங்களுக்கு மனதைத் தொடும் சக்தி உள்ளது. உலகிலேயே சினிமா தான் விலை குறைவான பொழுது போக்காகும் இதை, சமூகம், நாட்டின் மேம்பாட்டிற்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்மறையான விஷயங்கள் மற்றும் மகிழ்ச்சியை சினிமா ஏற்படுத்த வேண்டும். நல்ல தகவலுடன் கூடிய திரைப்படம் நம் மனதில் நீடித்து இருக்கும் என்பதை அனுபவம் கூறுகிறது.
பொழுதுபோக்கைத் தவிர ஞானத்தை வழங்கும் சக்தியும் திரைப்படத்திற்கு உள்ளது. நமது கலாச்சாரம், பாரம்பரியம், நமது நாகரீகத்தின் மதிப்புகள் மற்றும் நெறிகளை பலவீனப்படுத்தும் எதையும் சினிமாத்துறை செய்யக் கூடாது. இந்தியத் திரைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு முக்கியத் தகவலைக் கொண்டு செல்கின்றன. அவைகள், வெளி உலகிற்கு இந்தியத்துவத்தைத் தெரிவிக்க வேண்டும்.
உலகில் அதிக அளவிலான திரைப்படங்களை இந்தியா தயாரிக்கிறது. நமது திரைப்படங்கள், ஜப்பான், எகிப்து, சீனா. அமெரிக்கா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் பல நாடுகளில் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகின்றன. நமது முன்னணி கலாச்சார ஏற்றுமதிகளில் திரைப்படங்கள் உள்ளன. உலகளாவிய இந்திய சமுதாயத்தை இணைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
சினிமாவுக்கு நாடு, மதம் என்ற வேறுபாடு கிடையாது, அது உலகாளவிய மொழியைப் பேசுகிறது. இந்தியத் திரைப்படத் துறையின் திறமைகளை மட்டும் தேசிய விருதுகள் வெளிப்படுத்தவில்லை. தனது வளம் மற்றும் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சினிமாத்துறையினர் எடுத்துக்கூற வேண்டும். இயற்கையை மதிப்பதன் முக்கியத்துவத்தை கொரோனா பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்தது.
தாதா சாகேப் பால்கே விருது வென்றதற்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். இவரது ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறமைகள், இந்திய சினிமாத்துறைக்கு உண்மையிலேயே பதிய பரிமாணத்தை அளித்துள்ளது. மூன்று முடிச்சு, சிவாஜி. 16 வயதினிலே, பைரவி போன்ற திரைப்படங்கள் நினைவு கூரத்தக்கவை ஆகும்.
இவ்வாறு குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இத்துறை இணை அமைச்சர் எல் முருகன், செயலாளர் அபூர்வ சந்திரா திரைப்பட பிரிவின் நடுவர் குழுத் தலைவர் என் சந்திரா, திரைப்படம் அல்லாத பிரிவின் நடுவர் குழுத் தலைவர் அருண் சதா உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்